பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!
சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்களாவர்.
இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டுபவர்களாகப் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இதன்போது வருகை முனையத்தில் அறிவிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகப் போதைப்பொருள் தொகையைக் கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களின் இரண்டு பயணப் பைகளுக்குள் இருந்த விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக ‘திராட்சைப் பசை’ போன்று வெளிப்புறத்தில் தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றித் தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் தொகையையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

