தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம்
புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 303 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொதுக் கல்விக்காக 160 பில்லியனும், உயர்கல்விக்காக 122 பில்லியனும் மற்றும் தொழிற்கல்விக்காக 20 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மாத்திரம் அவற்றை செலவிடாமல், தேசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை இனங்கண்டு நிதியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினமான 08 பில்லியன் ரூபா இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தின் கீழ் செயற்படும் 310 தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு காலாண்டுகளில் 57,959 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் தரத்தையும் மேம்படுத்தி, பிராந்திய மட்டத்தில் மாணவர்கள் தொழில்நுட்பப் பட்டங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
“டித்வா” சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

