சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் பாரிய அபராதம்!
எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் (Asset Declarations) சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் கட்டாயமாக அபராதத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என விசேட அறிவிப்பொன்றை விடுத்து அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அபராதத் தொகை தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்திற்குப் பாரியதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், உரிய ஆண்டின் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதனைத் தாமதப்படுத்துவது அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் எச்சரித்தார்.
குறித்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்கள் மின்முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த மத்தியமயப்படுத்தப்பட்ட மின்முறைமையானது கடந்த 2026 மார்ச் 31ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன், இந்தப் பிரகடனங்களைப் பெற்றுக்கொள்வது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணியோ அல்லது பொறுப்போ அல்ல என்றும், இதுவொரு பிரஜையின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023 ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய புதிய அதிகாரிகள் குழுவொன்றும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 115ஆவது பிரிவின் கீழ் உரிமம் பெற்ற துணை முகவர்கள் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தரப்பினராகக் கருதப்படுகின்றனர்.
மேலும், தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள், பத்திரிகைச் செய்திப் பிரகடனக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், உரிமம் பெற்ற ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள், விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரிகள், அதேபோன்று அரச சேவை மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்துத் திணைக்கள உத்தியோகத்தர் தர அதிகாரிகள் இச்சொத்து விபரப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் 1954 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

