தமிழகவெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலையில் ; தலைவர் விஜய் அவசர ஆலோசனை
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தமிழகவெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அந்த கட்சியின் தலைவர் விஜய் அவசர ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை தவெக பெறுமா அல்லது இழுபறி நிலை நீடிக்குமா என்பது பிற்பகலுக்குப் பிறகு முழுமையாகத் தெரியவரும்.
ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி வியூகங்கள் குறித்து விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜோன் ஆரோக்கியசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

