ஏ.சி. வாங்கித் தராததால் இளம்பெண் தற்கொலை!
இந்தியாவின் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (26), இவரும் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் பூண்டி பாடசாலையில் படிக்கும் போதே காதல் மலர்ந்து உள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்துள்ளனர். குழந்தைகள் இல்லாத நிலையில் இருவருமே சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். மோனிகா வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெயில் காரணமாக இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு ஏ.சி. வாங்கி தருமாறு மோனிகா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (24) இரவு ஆகாஷ் மற்றும் அவரது தம்பி அவினாஷ், அப்பா மற்றும் அம்மா ஆகிய 4 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினார்கள். மனைவி மோனிகா மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார்.
காலையில் ஆகாஷ் எழுந்து வந்து பார்த்த போது படுக்கை அறையில் மனைவி மோனிகா புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்து கணவர் ஆகாஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் பொலிஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரச வைத்திய கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

