கும்பக்கன் ஓயா பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கும்பக்கன் ஓயா ஆற்றுப் படுக்கையை அண்டிய தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (26) பிற்பகல் 4.00 மணிக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
கும்பக்கன் ஓயா ஆற்றுப் படுக்கையை அண்டிய பிரதேசங்களில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறு வெள்ள அபாய நிலை காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவின் நக்கல, கும்பக்கன, மாதுறுகெட்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும், புத்தல பிரதேச செயலாளர் பிரிவின் ஒக்கம்பிட்டிய மற்றும் காமினிபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் உட்பட்ட கும்பக்கன் ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாயம் காணப்படுகின்றது.

