தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்
யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையிலுள்ள படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த வருடங்களைப் போன்றே இந்த வருடமும் மே 19ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள படைவீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் இந்த முறை 17ஆவதுநினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில் நாம் சில விசேட மாற்றங்களைச் செய்துள்ளோம். வழக்கத்தை விட படை வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பை பெருமளவில் அதிகரித்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து நம்முடன் இணைந்து முப்படைகளிலும் யுத்தம் புரிந்து, இந்நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் படை வீரர்களின் சமூகம் உள்ளது. நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுடனான தொடர்பை குறைவாகவே பேணி வந்தோம். எனவே, இந்த முறை வடக்கு கிழக்கில் உயிரிழந்த படை வீரர்களின் உறவினர்களை இந்த விழாவில் பங்கேற்கச் செய்வதற்கு விசேட வாய்ப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இதற்காக சுமார் 30 பேருக்கு நாம் அழைப்பு விடுத்துள்ளோம், அவர்களும் தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கமைய, ஒரு விசேட சந்தர்ப்பமாக ஜனாதிபதியுடன் இணைந்து, உயிரிழந்த தங்களது உறவினர்களுக்காக நாட்டின் கௌரவத்தை பகிர்ந்து கொண்டு, தங்களது மரியாதையை செலுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.” என்றார்.
அங்கு கருத்துத் தெரிவித்த படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் குரூப் கேப்டன் எல்.எம்.சி.டி.நிஸங்க, இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, படை வீரர்கள் சேவை அதிகாரசபை மற்றும் படை வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இங்கு இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, படை வீரர்கள் சேவை அதிகாரசபை மற்றும் படை வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் அன்றைய தின நினைவுச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளனர். படை வீரர்களின் பெற்றோர்கள் என்ற ரீதியில், பிரதான நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்த முறை 160 பேருக்கு நாம் வாய்ப்பளித்துள்ளோம். இந்த நிகழ்வை மாலை 6.45 மணியளவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.

