டீசல் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக விளக்கம்
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலர் என்ற விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றை இவ்வளவு அதிக விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என்றும், மத்திய கிழக்கில் போர்ச் சூழல் ஆரம்பமான பின்னர், மார்ச் 11ஆம் திகதி நாட்டுக்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலில் ஒரு பீப்பாயின் விலை 66.99 டொலர் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இன்றைய தினம் (17) மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 71.99 டொலர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், டீசல் கொள்வனவின் போது 286 டொலருக்கும் அதிகமான விலையை செலுத்த வேண்டியிருந்ததாகத் தெரிவித்த தலைவர், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக டீசல் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகவும், இதனால் ஒரு பீப்பாய் டீசலை 288 டொலர் முதல் 303 டொலர் வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய நேரிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றை ஒருபோதும் 286 டொலருக்கு வாங்கவில்லை. இந்த நெருக்கடி நிலை ஆரம்பமான பின்னர் மார்ச் 11ஆம் திகதி வந்த ‘மர்பன்’ வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.99 டொலராகும். இன்று வரும் கப்பலில் அதன் விலை 71.99 டொலர். எனவே கச்சா எண்ணெய் அத்தகைய விலைக்கு வாங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி செய்த ஒரு அறிக்கையை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்தியாக வெளியிட்டிருக்கலாம் அல்லது திட்டமிட்டுப் பரப்பப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். HSBC நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ‘கச்சா எண்ணெய்’ என்று குறிப்பிடவில்லை, பொதுவாக ‘எரிபொருள் கொள்வனவு’ என்றே கூறியுள்ளனர்.
உலக சந்தையில் டீசல் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. மார்ச் 31ஆம் திகதி வந்த டீசல் கப்பலுக்கு ஒரு பீப்பாய்க்கு 285.28 டொலர் செலுத்த வேண்டியிருந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 7ஆம் திகதி வந்த கப்பலுக்கு 288.06 டொலரும், சுப்பர் டீசலுக்கு 303.77 டொலரும் செலவாகியுள்ளது. அவ்வாறு அந்த விலைக்கு எரிபொருளைப் பெற்றிருக்காவிட்டால் நாட்டில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

