எச்சரிக்கையுடன் இருக்கவும்! வானிலை தொடர்பில் புதிய முன்னறிவிப்பு
இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து வட அகலாங்கு 10.1N இற்கும் கிழக்கு நெட்டங்கு 82.5E இற்கும் அருகில் நிலை கொண்டுள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் விரிகுடாவின் ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு இது காற்றழுத்தத் தாழ்வு பிரதேசமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்கள், கடற்சார் சமூகம் உள்ளிட்ட பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

