ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை நாளை வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இம்மனுக்கள் சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (03) முற்பகல் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் 15 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

அம்மனுதாரர்களின் சட்டத்தரணிகள் இன்று திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மட்டுமன்றி நீதித்துறை அதிகாரமும் குறைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டனர். 

இதற்கமைய, குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் அது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். 

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ளதுடன், மேலதிக சமர்ப்பணங்கள் நாளை முன்வைக்கப்படவுள்ளன.

manel